ஈழ விவகாரம் குறித்து காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் திடீர் கூட்டம்-எம்.பிக்களை குழப்ப முயற்சி?
டெல்லி: இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் டெல்லியில் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.இக்கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை அவர் அழைத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் கூட்டியுள்ள இக்கூட்டம் எம்.பிக்களை குழப்ப காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகிறது.
டெல்லியில் இருந்தபடி இயங்கி வரும் உலகளாவிய வளர்ச்சிக்கான மனித உரிமைக்கான எம்.பிக்கள் அமைப்பு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சுதர்சன நாச்சியப்பன். இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களை மட்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்று கூட்டி வந்தது நினைவிருக்கலாம். அந்தக் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐயைச் சேர்ந்த எம்.பி அப்பாத்துரை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டம் இலங்கையின் ரகசிய ஆதரவுடன் நடைபெறும் கூட்டம் என்ற சந்தேகம் இருப்பதால் டி.ராஜா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
மேலும் இந்தக் கூட்டம் தொடர்பாக தன்னை சந்தித்த எம்.பி. அப்பாத்துரையிடம் சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், இலங்கையில் நடந்த தவறுக்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணம், இலங்கை அரசி்ன் சமரச முயற்சிகளுக்கு புலிகள்தான் தொடர்ந்து ஊறு விளைவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர். உண்மையில் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல்வாதிகள்தான் காரணம் என்று கூறினாராம் நாச்சியப்பன். மேலும் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தான் கருதவில்லை என்றும் நாச்சியப்பன் தெரிவித்தாராம்.
இதன் மூலம், இன்றைய கூட்டத்தின் மூலம் ஈழப் பிரச்சினை குறித்த எம்.பிக்களின் கருத்தை குழப்ப காங்கிரஸ் கட்சி ரகசியத் திட்டம் தீட்டியுள்ளது தெளிவாகிறது என்று ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.