தி. நகர், புரசை சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட்
சென்னை தி. நகர் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 6 கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
காலை 7.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக ஒவ்வொரு கடைக்குள் நுழைந்தனர். இதையடுத்து கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கடையின் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சோதனையால் கடைகள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டது.
சுமார் 50 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டனர். நாள் தோறும் நடக்கும் வியாபாரத்தின் அளவு, மேற்கொள்ளப்படும் வங்கி பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வருமானவரித் துறை சோதனை நடப்பதை அறியாமல் கடைக்கு வந்த பொது மக்கள் கடைக்குள் அனுமதிக்கப்படாததால் குழப்பமடைந்தனர். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாகக் காணப்பட்டது.