போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி ஜெ. பேசக்கூடாது: கோத்தபயா மீண்டும் திமிர்ப் பேச்சு!
கொழும்பு: உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோத்தபயா ராஜபக்சே அறிவுரை கூறியுள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்த கோத்தபயா ராஜபக்சே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மீண்டு்ம் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளார் கோத்தபயா.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஜெயலலிதா அரசியல் ஆதரவைப் பெருக்கும் நோக்கத்தில் தான் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். அவை எல்லாம் அர்த்தமற்ற தீர்மானங்கள். உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால், தமிழக மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்காமல் இருக்கச் செய்யட்டும்.
இலங்கை நிலவரத்தை நாங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டும். தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்த வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். அதையெல்லாம் விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி அவர் பேசக் கூடாது. அது பயனற்ற பேச்சு.
இலங்கையின் கொலைக்களங்கள் என்று சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் போலியானவை. அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையானதன்று.
இலங்கை ஒன்றும் சர்வாதிகார நாடல்ல, ஜனநாயகம் தான். பன்னாட்டு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. நாங்கள் ஒரு இறையாண்மை உள்ள நாடு. எனவே, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என்று அவர் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபையை அவமானப்படுத்தியும், தமிழக முதல்வரை விமர்சித்தும், அண்டை நாட்டுத் தலைவர் ஒருவர் மரியாதைக்குறைவாக பேசியுள்ள நிலையில் இதுவரை மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் அதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கோத்தபயா திமிர்த்தனமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.