இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை முறித்தது ஹமாஸ்!
கடந்த வியாழக்கிழமை தெற்கு இஸ்ரேலில் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பேர் பலியாயினர். காஸா பகுதியைச் சேர்ந்த பாபுலர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டி தான் கார் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் 12 முறை நடத்திய பயங்கர தாக்குதல்களில் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந் நிலையில் இனியும் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதில் அர்த்தமில்லை என்று ஹமாஸ் ராணுவப் பிரிவான இஸ் அல்-தின் அல் காசிம் பிரிகேட் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் விமானத் தாக்குதலையடுத்து அந் நாட்டின் மீது காஸா பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ராக்கெட்களை வானிலேயே தடுத்து வெடிக்கச் செய்ய ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணைளை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது.
5 வீரர்கள் சாவு-இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெற்றத எகிப்து:
இந் நிலையில் எகிப்தின் சினாய் பகுதியில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினருக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் எகிப்தைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பினரை தாக்க வந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்ததாகவும், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் நடந்த சண்டையில் தங்கள் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ள எகிப்து, இதற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோரும் வரை அந் நாட்டுக்கான தங்களது தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.