உரிமையாளரிடமே தனியார் கல்லூரியை விற்க முயன்ற மர்ம கும்பல் - போலீசார் வலை வீச்சு!
கரூர் : கரூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் கல்லூரியை விற்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கல்லூரி உரிமையாளரிடமே அதை விற்க முயன்றதால் இந்த மோசடி குறித்துத் தெரிய வந்தது.
கரூர் - கோவை ரோட்டில் வி.எஸ்.பி. என்ற தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விற்பனைக்கு உள்ளதாக கடந்த 14 ம் தேதி ஆங்கில பத்திரிகை ஒன்றிலும், ஒரு சில இணையதளங்களிலும் விளம்பரம் வெளியாகி இருந்தது.
விற்பனைக்கு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணை கொள்ள வேண்டும் என சில செல் எண்களை கொடுத்துள்ளனர். மேலும், தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், கல்லூரியின் விலை ரூபாய் 120 கோடி எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி உரிமையாளர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவரிடமே பேரம் பேசியுள்ளனர். இதைக் கேட்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அந்த தனியார் கல்லூரி உரிமையாளர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகராஜனிடம், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. நாகராஜன் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.