லாரி ஸ்டிரைக்கால் ஈரோட்டில் ஜவுளித் தொழில் முடக்கம்-நாமக்கல்லில் முட்டைகள் தேக்கம்
ஈரோட்டில் மட்டும் ரூ. 150 கோடி மதிப்பிலான ஜவுளித் துணிகள் தேக்கமடைந்துள்ளன. லாரி ஸ்டிரைக் 3வது நாளாக இன்றும் தொடர்வதால் இந்த அவல நிலை.
உற்பத்தியாளர்களிடம் மட்டும் ரூ. 75 கோடி மதிப்பிலான துணிகள் தேங்கிப் போய்க் கிடக்கின்றன. அதேபோல சென்னிமலையில் ரூ. 25 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள், ரூ. 20 கோடி மதிப்பிலான காடா துணி, பிற ஜவுளிப் பொருட்கள் தேங்கியுள்ளன.
ஈரோட்டிலிருந்து தினசரி குஹராஜ் மற்றும் பிற மாநிலங்களுக்கு சாயமேற்றுவதற்காக ரூ. 10 கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது இது ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இதேபோல மஞ்சள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தோல் பொருட்கள் உள்ளிட்ட இன்ன பிற பொருட்களை அனுப்பும் பணியும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகள் அனைத்தும் தேங்கி அழுகும் நிலைக்குச் சென்று கொண்டுள்ளன. இதனால் பல கோடி நஷ்டத்தை சந்திக்கும் அபாயத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளனர். மேலும் முட்டைகள் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படாமல் இருப்பதால் தமிழகம் முழுவதும் முட்டை விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல கறிக்கோழிகள் அனுப்புவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கோழிக்கறி விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.