வரத்து அதிகரிப்பு: மல்லி, பிச்சிப்பூ விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாலாட்டின் புதூர், வில்லிசேரி, கயத்தாறு, கழுகுமலை, முடுக்குமீட்டான்பட்டி, குருமலை, வானரமூட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை மற்றும் பிச்சிப்பூ செடிகளை விவசாயிகள் அதிக அளவு வளர்த்து வருகின்றனர்.
தற்போது மல்லிகைப் பூ மற்றும் பிச்சிப் பூவின் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப் பூ கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனையானது. மேலும் மல்லிகைப் பூவின் விளைச்சலும் குறைந்து காணப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சிப் பூ கிலோவுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை விலைபோனது. தற்போது வரத்து அதிகரிப்பால் பிச்சிப் பூ கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. மல்லிகை மற்றும் பிச்சிப் பூ விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மல்லிகைப் பூ விலை கடுமையாக குறைந்துள்ளதால் தோட்டங்களில் பூ பறிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியவில்லை. பூத்த பூக்களை அப்படியே வாடவிட மனமில்லாமல் தான் குறைந்த விலைக்கு விற்று வருகிறோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.