கேரளா-கூட்டுறவு வங்கியின் லாக்கரை உடைத்து 5 கிலோ நகை கொள்ளை
கொல்லம்: கேரளாவில் பத்தனம்திட்டா அருகே உள்ள ஒரு கூட்டுறவு வங்கியின் லாக்கர் கதவை உடைத்து 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டம் பத்தளம் அருகே உள்ள குரியானிபள்ளியில் மெழுவேலி கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று காலையில் வங்கியைத் திறந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வங்கியில் உள்ள லாக்கர் கதவு உடைக்கப்பட்டு அனைத்து லாக்கர்களும் காலியாகக் கிடந்தன.
உடனே இது குறித்து பந்தளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட எஸ்பி பாலசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையர்கள் வங்கியின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பியை கேஸ் கட்டரால் அறுத்து உள்ளே நுழைந்ததும், லாக்கர் கதவையும் கேஸ் கட்டரால் உடைத்து கொள்ளையடித்தும் தெரிய வந்தது. லாக்கரில் இருந்த 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கூட்டுறவு வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பந்தளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.