நாடாளுமன்றத்தில் திமுக-பாஜக எம்பிக்கள் மோதல்-அவை ஒத்திவைப்பு
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையொட்டி ஊழல் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
கேள்வி நேரத்துக்காக அவை கூடியதும், இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பேசுமாறு திமுக எம்பி டி.ஆர்.பாலுவை சபாநாயகர் மீரா குமார் அழைத்தார்.
அப்போது பாஜக எம்பிக்கள் எழுந்து, முதலில் ஊழல் விவகாரம் குறித்து தான் விவாதிக்க வேண்டும் என்று கூறியபடி அவையின் மையப் பகுதியில் குவிந்தனர்.
அதே போல இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி திமுக எம்பிக்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்தனர்.
இருதரப்பினரும் தங்களது கருத்தை வலியுறுத்தியபடி இருந்ததால் முதலில் ஊழல் குறித்துப் பேசலாம் என மீராகுமார் அறிவித்தார்.
இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையை மீரா குமார் ஒத்தி வைத்தார்.