லாரி ஸ்டிரைக் எதிரொலி: உருளை, பெல்லாரி, கேரட் விலை உயர்வு
தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 9 ஆயிரத்து 500 லாரிகள் ஓடவில்லை.
வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் சரக்குகளை ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டிலிருந்து கேரளாவுக்கு தினமும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகளை எங்கும் அனுப்பி வைக்க முடியமால் வியாபாரிகள் திணறுகின்றனர்.
நயினார்குளம், நெல்லை, பாளை மார்க்கெட்டுகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வரப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பூனோவில் இருந்து வரும் பெல்லாரி கிலோ ரூ. 20-ல் இருந்து ரூ.24 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரில் இருந்து வரும் உருளைக் கிழங்கு ரூ.15-ல் இருந்து ரூ.18ஆக உயர்ந்துள்ளது. கேரட் ரூ.20ல் இருந்து ரூ.24 ஆகவும் அதிகரித்துள்ளது. கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட உள்ளூர் காய்கறிகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.