லாரி ஸ்டிரைக்-தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆயிரம் டன் உப்பு தேக்கம்
தூத்துக்குடி: டீசல் விலை மற்றும் சுங்க வரியை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைக வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 18ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இன்று 5வது நாளாக போராட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சரக்கு லாரிகள், சரக்கு பொட்டக லாரிகள், டிப்பர் லாரிகள், டாரஸ் லாரிகள், டெங்கர் லாரிகள் என மொத்தம் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கப்பல்களில் வந்த சரக்குகள் இறக்கமப்படாமலேயே கப்பலிலேயே இருப்பதால் இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்றுமதி செய்யவும் வழக்கம்போல் வெளியிடங்களில் இருந்து பொருட்கள் வராததால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு வெளிமாநிலங்களுக்கு அனுப்பு முடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் டன் உப்பு தேங்கியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சிறிய உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் தனபாலன் கூறியதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தினமும் 300 லாரிகளில் உப்பு பண்டல்கள் கொண்டு செல்லப்படும்.
கடந்த 4 நாட்களாக லாரிகள் வேலை நிறுத்தத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆயிரம் டன் உப்பு தேங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.