தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி
சென்னை: தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
தாம்பரம் மாடம்பாக்கம் பதுவன்சேரி ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் என்பவரின் மகன் ரூபன் (10). திருவஞ்சேரி அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் இன்று காலையும் ரூபன், தனது நண்பன் சபரியுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்து சென்றான்.
அவர்கள் இருவரும் பதுவன்சேரி தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் உள்ள குறுகிய தெருவில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மணல் லாரி வேகமாக வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராவிதமாக இடப் புறமாகக் கவிழ்ந்தது. இதில் தெருவோரம் நடந்து சென்ற ரூபன் லாரிக்கடியில் சிக்கினான். சபரி அதிர்ஷ்டவசமாகத் தப்பினான்.
லாரி கவிழ்ந்ததில் ரூபன் உயிரோடு மணலில் புதைந்தான். இதைப் பார்த்த சிறுவன் சபரி ரூபனைக் காப்பாற்றுமாறு அலறினான். இதற்கிடையே மணலில் 4 சிறுவர்கள் புதைந்துள்ளதாக செய்தி பரவியதால் அங்கு நூற்றுக் கணக்கானோர் கூடிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியைத் தூக்கினர். இதையடுத்து தெருவில் சிந்திய மணலை அள்ள சுமார் 1 மணி நேரம் எடுத்தது. பின்னர் மணலில் புதைந்து கிடந்த ரூபனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தான்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜன், கிளீனர் வையாபுரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற சிறுவன் மணலில் புதைந்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.