தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்: 'அப்பப்பப்பா'...பாஜக: 'அடடடடடடா'...விஸ்வ ஹிந்து பரிஷத்!
நிருபர்களிடம் அவர் கூறுகையில், தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கடந்த திமுக ஆட்சியில் அறிவித்தபோது அதை பாஜக. எதிர்த்தது. மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது என்றும், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதை பாஜக முழுமனதோடு வரவேற்கிறது.
இந்த சட்டத்தை எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் மாற்றம் செய்யாதபடி தகுந்த சட்ட திருத்தங்களையும் அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசு இப்போதே நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு பாஜக. உறுதுணை புரியும், இந்த சட்ட திருத்தம் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றார்.
தமிழர் பெருமை மீட்பு-விஸ்வ ஹிந்து பரிஷத்:
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1 என்று மாற்றியிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் வேதாந்தம் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தையும் கலாசாரப் பெருமையையும் மீட்டுக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்ற திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத சட்டமான, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தை மாதம் முதல் நாளுக்கு மாற்றியமைத்த புதிய தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை முதல் நாளுக்கு மாற்றி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேசிய முதல்வர், தமிழ் மக்களின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் மகோன்னதத்தையும், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த காலக் கணிப்பின் சிறப்பையும் கூறியதோடு, வானியல் நூல்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதப் பிறப்பில் கொண்டாடப்படுவதே சிறப்பானது, முறையானது என்பதையும் வெகு அழகாக விளக்கிக் கூறியுள்ளார்.
மேலும் சுய விளம்பரத்திற்காக நிறைவேற்றப்பட்ட திமுக அரசின் சட்டமானது தமிழ் மக்களின் ஆன்மீக மற்றும் கலாசார உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆதீன கர்த்தர்கள், தமிழ்ப் பண்டிதர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க இந்த சட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.