சென்னை மாநகர காவல் ஆணையத்துடன் புறநகர் காவல் ஆணையகரம் இணைந்தது
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (24.8.2011) தலைமைச் செயலகத்தில், சென்னை புறநகர் காவல் ஆணையரகத்தை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக மாற்றி அதற்குண்டான அரசாணையை வழங்கினார்.
ஜெயலலிதா ஆணைப்படி, சென்னையை ஒட்டிப் புறநகரப் பகுதியில் பெருகி வரும் நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு, குடியிருப்பு பகுதி விரிவாக்கம் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக காவல் கண்காணிப்பு முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் குற்றப்பிரிவு, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டத்தையும் சென்னை மாநகரக் காவல் துறையையும் ஒன்றிணைக்க ஏதுவாக 14.2.2005 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் மூலம் காவல்துறை தலைவர் தலைமையின் கீழ் சென்னை புறநகர் காவல் ஆணையரகம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. இதனால் காவல் கண்காணிப்பு முறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முன்பு இருந்தபடியே சென்னை மாநகர காவல் ஆணையாளரின் தலைமையின் கீழ் சென்னை பெருநகர காவல் செயல்படுமானால், சென்னை மாநகரத்தில் நடைமுறைபடுத்தப்படும் ஒழுங்கு முறை, தொழில்நுட்பம் மற்றும் இதர சேவைகளை சென்னையை அடுத்துள்ள புறநகர்ப் பகுதி மக்கள் அனைவருக்கும் வழங்க இயலும். மேலும், இந்த இணைப்பின் காரணமாக சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுத்துதல், குற்றத் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்பு முறைமை சீர்படுத்துதல், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை, திறம்பட்ட ஆளினர் மேலாண்மை மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு உறுதி செய்தல் ஆகியவை மேம்படுத்தப்படும்.
ஜெயலலிதா தலைமையிலான அரசின் 2011-2012ஆம் ஆண்டு திருத்த நிதிநிலை அறிக்கையில், சென்னைப் புறநகர் காவல் ஆணையரகத்தை சென்னை மாநகரக்காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகரக் காவல் ஆணையரகமாக உருவாக்கப்படும் என்றும், நிருவாக வசதிக்காக இந்த ஆணையரகம் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், புறநகர் காவல் ஆணையரகத்தை சென்னை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக மாற்றும் அரசாணையை சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வழங்கினார்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.