தமிழக,கேரள எல்லைகள் வழியாக கள்ளசாராயம் கடத்துவது அதிகரித்துள்ளது: உளவுத் துறை எச்சரிப்பு
கோவை: தமிழக எல்லை பகுதிகளின் வழியாக கேரளாவிற்கு கள்ள சாராயம் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக, கேரள உளவுத்துறையினர் அறிக்கை தெரிவிக்கிறது.
கேரளாவை சேர்ந்த உளவுத்துறையினர் சமீபத்தில், அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியிடம் அளித்துள்ள அறிக்கையில், கேரளாவின் எல்லை பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களாக அதிகளவிலான கள்ளசாராயம் கடத்தப்படுவதாக தெரிகிறது. சொகுசு கார்கள் மற்றும் வாகனங்களில் வைத்து கள்ள சாராயம் கடத்தப்படுவதால், வெளியே தெரிவதில்லை.
கேரளாவின் எல்லை பகுதிகளான வாளையார், கூடலூர், மங்களூரு, குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளின் வழியாக வரும் வாகனங்களை திடீர் சோதனையிட்டதில், பல சொகுசு வாகனங்கள் மற்றும் லாரிகளில் கள்ள சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் கள்ளசாராயம் கடத்திய வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டாலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆந்திராவில் எல்லைகளை கடந்து செல்லும் பஸ்களிலும் கள்ளசாராயம் அதிகளவில் கடத்தப்படுகிறது.
ஆந்திராவில் தயாரிக்கப்படும் கள்ளசாராயம் நேரடியாக கேரளாவிற்கு கடத்தப்படுவதில்லை. இவை எல்லை பகுதிகளில் உள்ள காடுகளில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய குடிசைகளில் பதுக்கி வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப சிறு அளவுகளில் சப்ளை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளுக்கும் கள்ள சாராயம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக அந்த மாநிலங்களின் உளவுத்துறைகளும் எச்சரித்துள்ளன. இது குறித்து எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.