பூலித்தேவனை இழிவுபடுத்துவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்!
நெல்லை: சுதந்திர போராட்டத்திற்கு முழக்கமிட்ட பூலித்தேவனை ஆதி தமிழர் பேரவை இழிவுப்படுத்துவதாகக் கூறி நெற்கட்டும்செவல் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் நெற்கட்டும்செவல் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட பூலித்தேவன் ஆண்ட பாளையம் நெல்கட்டும்செவல். இந்த வரலாற்றை இழிவுப்படுத்துவதற்காக ஆதி தமிழர் பேரவையினர் ஒரு நூலை வெளியிட்டுள்ளனர். அதில் நெற்கட்டும்செவல் பாளையத்தை ஆண்ட மன்னன் ஒண்டிவீரன் என்றும், பூலித்தேவன் பெற்றோர் அவரிடம் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி ஒணடி வீரன் ஜெயந்தி விழாவில் மாமன்னன் ஒண்டி வீரன் என சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஒண்டிவீரன் சமாதி நெற்கட்டு்ம்செவல் பச்சேரியில் உள்ள பகடைகுடியில் அமைந்துள்ளது. இதில் நெற்கட்டும்செவல் பாளையத்தை ஆண்ட மாமன்னன் ஒண்டிவீரன் என கல்வெட்டு வைத்துள்ளனர்.
இதனால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த கல்வெட்டை அகற்ற வேண்டும். பூலித்தேவனின் மாளிகை மாவீரன் பூலித்தேவன் மாளிகை என்ற பெயரில் உள்ளது. தென் தமிழகத்தில் 16 பாளையங்களில் தலைமை பாளையம் ஆவுடையாபுரம்-நெற்கட்டும்செவல் ஆகும். இதற்கு சான்றாக தமிழக வரலாற்று நூல்களில் மாமன்னன் பூலித்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பூலிதேவன் மாளிகையை மாமன்னன் பூலித்தேவன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இவவாறு அந்த மனுவி்ல் கூறப்பட்டுள்ளது.