பொள்ளாச்சி காட்டில் வவ்வால்களை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.50,000 அபராதம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வனப்பகுதியில் வவ்வால்களை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினரால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதி்க்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் நூற்றுக்கும் மேலான வவ்வால்கள் உள்ளது. இதனால், வவ்வால்களை சிலர் குறிவைத்து வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் உடும்பி சாலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் கோட்டூரைச் சேர்ந்த அங்குராஜ்(38), சங்கம்பாளையத்தை சேர்ந்த சண்முகம்(37), கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த வீரன்(40) ஆகிய 3 பேர் வவ்வால்களை வலைகளை விரித்து பிடித்திருந்தது தெரிந்திருந்தது.
அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அங்குராஜ்க்கு 20 ஆயிரம் ரூபாயும், சண்முகம், வீரன் ஆகியோருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.