எதியூரப்பாவின் ஜாமீன் மனு தள்ளுபடி- லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர்
அரசுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை தனது சுய லாபத்துக்காக, வளைத்துக் கொண்டதாக எதியூரப்பா மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலத்தை விற்க அனுமதியளித்து அவர் உத்தரவிட்டார்.
அவர் முதல்வராக இருந்தபோது பெங்களூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை டிநோட்டிபை (denotify) செய்தார், எதியூரப்பா. இதன்மூலம் அவற்றை அரசு விற்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்கப்பட்டன.
இந்த நிலங்களை வாங்கியவர்கள் மூலம் எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகனன் சோகன் குமார் மற்றும் 11 பேர் பண லாபம் அடைந்தனர். இதையடுத்து எதியூரப்பா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் பரத்வாஜிடம் இரு வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர். இதற்கு பரத்வாஜ் அனுமதியும் கொடுத்தார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எதியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தார். தன் மீது வழக்குத் தொடர ஆளுநர் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், ஆளுநரின் அனுமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம், எதியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கவும் மறுத்துவிட்டது.
இதற்கிடையே பெல்லாரியில் சட்ட விரோத சுரங்கங்கள் நடத்த அனுமதிக்க விவகாரத்தில் லோக்ஆயுக்தாவும் எதியூரப்பா மீது குற்றம் சாட்டியது. இந்த வழக்கில், இன்று லோக் ஆயுக்தா நீதிமன்றம் முன் எதியூரப்பா ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதற்கு லோக்ஆயுக்தா தரப்பு எதிர் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இவை தவிர எதியூரப்பா மீது மேலும் சில ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதற்கிடையே கடந்த இரு வார காலமாக மருத்துவமனையில் உள்ள எதியூரப்பா, தனக்கு அவ்வப்போது கஜினி சூர்யா மாதிரி நினைவு தப்பி மறதி ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணைகளில் இருந்து தப்ப அவர் போடும் நாடகமா அல்லது அவருக்கு உண்மையிலேயே பிரச்சனை இருக்கிறதா என்பது அடுத்த கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே தெரியவரும்.
இதே போல காமன்வெல்த் ஊழலில் சிக்கி கைதான மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடியும் தனக்கு மறதி ஏற்படுவதாகக் கூறியதும், பின்னர் அது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுன், தனக்கு நினைவு சரியாகவே இருப்பதாகவும் 'பல்டி' அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் எதியூரப்பாவும் மறதி நோய் என்று கூறியுள்ளார்.