தீபாவளியையொட்டி புதிய வீடுகள்-அபார்ட்மெண்ட்கள் விலை சரியலாம்!
கடந்த 2 ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வீடுகள் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி வைத்துக் கொண்டு விற்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்தத் திட்டங்களுக்காக வங்கிகள், பங்குகள், நிதி நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி நிதியை இந்த கட்டுமான நிறுவனங்கள் கடனாகத் திரட்டியுள்ளன. ஆனால், வீடுகள் விற்பனை மந்தமாக உள்ளதால், இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், வட்டி கூட கட்ட முடியாமல் இந்த நிறுவனங்கள் திணறி வருகின்றன.
வட்டியையும் முதலீட்டையும் திரும்பக் கேட்டு நிதி நிறுவனங்களும், வங்கிகளும் நெருக்கி வருவதால் வீடுகள், அபார்ட்மெண்ட்களின் விலையைக் குறைத்தாவது விற்க வேண்டிய நிலைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் 11 முன்னணி ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 38,000 கோடியாகும். இந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வட்டியைக் கட்டவும் இந்த நிறுவனங்கள் தங்களது வீடுகளின் விற்பனையை எப்படியாவது அதிகரித்தாக வேண்டிய நிலையில் உள்ளன.
இதனால் வரும் அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டி, சிறப்பு விலைக் குறைப்புத் திட்டங்களை அறிவித்து வீடுகள், அபார்ட்மெண்ட்களின் விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்த நேரத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை விலைகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.