தொடர் பேய் மழை- உகாண்டாவில் நிலச்சரிவு: 50 பேர் பலி
புளுகான்யா: உகாண்டாவின் இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் சிசியி மற்றும் புளுகான்யா கிராமங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மக்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தால் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதில் 50 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புப் படையினரும் அந்த 2 கிராமங்களுக்கும் விரைந்தனர். இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 15 உடல்கள் சிசியிலும், 7 உடல்கள் புளுகான்யாவிலும் கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன 30 பேரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
மண்ணைத் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலியாகினர், ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.