நில மோசடி புகார்- அடுத்த விக்கெட் சுரேஷ்ராஜன்!
நாகர்கோவில்: நில மோசடி வழக்குத் தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிய வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்ட திமுக பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் அஜிதா மனோ தங்கராஜ். இவருக்கு சொந்தமான, பத்தரை ஏக்கர் நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த தயாபாக்ய சிங் வாங்கினார்.
இதில் ஒரு பகுதி, தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் வருவதால் வனத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக, அஜிதா கூறியதால், முதற்கட்டமாக, மூன்று ஏக்கர் ஒன்பது சென்ட் நிலம், பவர் எழுதி வாங்கப்பட்டது.
மீதமுள்ள நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல், பணம் கேட்ட போது, தயாபாக்யசிங் கொடுக்க மறுத்தார்.
இதைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சர் சுரேஷ் ராஜனும், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா-வும் சேர்ந்து மிரட்டியதாகவும், பின்பு போலியாக ஆவணம் தயாரித்து சரவணபிரசாத் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து மனுதாரர் நீதி மன்றத்தில் னு தாக்கல் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யநாகர்கோவில் இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அஜிதா, ஷா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, விரைவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.