பிரசாந்த் பூஷனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தான் கூறிய கருத்துகளுக்காக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் தனக்கு அனுப்பப் பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் அதற்கு தகுந்த விளக்கம் கேட்டும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நோட்டீஸ், முற்றிலும் நியாயமற்ற ஒன்று என்று குறிப்பிட்ட அவர், பொதுக்கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் உண்மையைக் கூறும்போது, அது நாடாளுமன்ற உரிமை மீறலாகாது என்றார்.
நேற்று, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் இது தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு விளக்கமோ, மன்னிப்போ கோரப்போவதில்லை என்றும் கைது செய்வதாக இருந்தால் செய்யட்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.
அன்னா ஹஸாரே குழுவில் இருந்த அனைவருக்குமே இப்போது உரிமை மீறல், வருமான வரி வழக்கு என சிக்கலில் சிக்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் அரசின் பழிவாங்கல் என்று கூறும் இந்த அன்னா குழுவினர், சட்டப்படி இந்த வழக்கு எதையும் சந்திக்க மாட்டோம் என்றும் பிடிவாதம் காட்டி வருகின்றனர்.