பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
மயில்சாமி என்ற வக்கீல் இதுதொடர்பாக தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதில், கருணை மனுக்கள் மீது மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரை, மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், யார் யாரெல்லாம் கருணை மனுவை ஆதரித்து மனு செய்திருந்தனர், பரிந்துரை செய்திருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தனக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதாக கூறியிருந்தார்.
இதை விசாரித்த தகவல் ஆணையம், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை வெளியிடுவது பாதுகாப்பு சம்பந்தமானது என்பதால் அதைத் தவிர்த்து பிற தகவல்களை மனுதாரருக்கு அளிக்குமாறு மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டால் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டு காலம் தாமதமானது ஏன் என்பது குறித்த விவரங்கள் வெளியாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.