கேரள அரசு கால் சென்டர்: குவிந்த புகார்கள், திணறிய ஊழியர்கள்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட 24 மணி நேர கால் சென்டரில் ஒரே நாளில் 2.25 லட்சம் அழைப்புகள் குவிந்தன.
இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் இலவசமாக தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 2.25 அழைப்புகள் வந்து குவிந்துள்ளன.
அடுத்தடுத்து வந்த அழைப்புகளை சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். தற்போது அந்த சென்டரில் 3 ஷிப்டுகளில் 16 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா மட்டுமின்றி வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாள மக்கள் இந்த கால் சென்டரை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த புதிய திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.