மும்பை விமான நிலைய மெயின் ரன்வே 3 நாட்களுக்கு பின் திறப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தின் முதன்மை ஓடுதளம் மூன்று நாட்களுக்கு பின் இன்று பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு துருக்கிய விமானமான ஏர்பஸ் 340 மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குகையில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று சேற்றில் சிக்கியது. அந்த விமானத்தை உடனே சேற்றில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் ஓடுதளம் மூடப்பட்டது.
இதையடுத்து லார்சன் அன்ட் டூப்ரோ, எம்ஐஏஎல், ஏர் இந்தியா மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் பணியாளர்கள் உள்பட 200 பேர் ஷிப்ட் முறையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தை சேற்றில் இருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களின் இடைவிடாத முயற்சியால் இன்று அதிகாலை 1. 17 மணிக்கு விமானம் மீட்கப்பட்டது. இதையடுத்து காலை 6. 51 மணிக்கு பயன்பாட்டிற்காக ஓடுதளம் திறந்துவிடப்பட்டது.
முதன்மை ஓடுதளம் மூடப்பட்டிருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, மேலும் பல திருப்பிவிடப்பட்டன.