ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி சிறைக்குப் போக ப.சிதம்பரம் தயாராகட்டும்- சுப்ரமணியம் சாமி
அலகாபாத்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் விரைவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிக்குவார். அவர் சிறைக்குப் போக இப்போதே தயாராகிக் கொள்வது நல்லது என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி.
அலகாபாத்தில் நடந்த ஊழல்-ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், முதுகெலும்பில்லாத ஒரு பிரதமரின் தலைமையில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அடியோடு வீழ்த்த மக்கள் ஆயத்தமாக வேண்டும்.
2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையின் படி 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதே, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மிக முக்கியக் காரணம். 2008ல் ஸ்பெக்ட்ரத்தை வாங்கிய நிறுவனங்கள் அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, வாங்கிய விலையை விட எட்டு மடங்கு விலை அதிகம் வைத்து விற்று விட்டன.
ஊழல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பேசி வருகிறார். தனது கட்சியினர் செய்து வரும் ஊழலை மிகநெருக்கத்தில் இருந்து தொடர்ந்து பார்த்து வருவதால் அவருக்கு ஊழல் குறித்து நன்கு தெரிந்திருக்கிறது. இதனால்தான் ராம்தேவைப் பார்த்து அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் ப.சிதம்பரம் சிக்குவார். அவர் சிறைக்குப் போக தயாராகிக் கொள்ளட்டும். நாட்டிலேயே மிகப் பெரிய ஊழலாக இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உருவெடுத்திருப்பது நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்றார் சாமி.