நேதாஜியின் படையில் பணியாற்றிய தியாகிக்கு விரைவில் பென்ஷன் வழங்கிய கலெக்டர் சகாயம்
மதுரை: ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த, நேதாஜியின் சுதந்திர போராட்ட படையில் பணியாற்றிய, தியாகிக்கு மதுரை கலெக்டர் சகாயம், விரைந்து பென்ஷன் தொகை வழங்கி உதவினார்.
மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் மாயழகு (83). இவர் வயது முதிர்ந்த போதும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் ரயிலில் மிட்டாய் விற்பனை செய்து தனது வாழ்க்கையை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
தியாகிகள் பென்ஷன் கோரி கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் மனு அளித்தார். ஆனால் இவர் மனு மீது அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜவஹர் என்பவர் இதை அறிந்தார்.
போஸின் இந்திய தேசிய ராணுவப் படையில் மாயழகு பணியாற்றியது குறித்தும், அவருக்கு முதியோர் பென்ஷன் வழங்குமாறும் கூறி மதுரை கலெக்டர் சகாயத்திற்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங் ஞானதுரை விசாரணை நடத்தினார். விசாரணையில் மாயழகு இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, மாயழகுக்கு பென்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டது.