ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது புதுவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதியும், ஜெயேந்திரரும் போனில் பேரம் பேசியது போன்ற உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
செல்போன் பேரம் பல்வேறு சந்தேகத்தை எழுப்புவதால் சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. சுகுணா சாட்சி விசாரணைக்கு 8 வார காலம் தடை விதித்தார்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரைச் சேர்ந்த கே.திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
இது போன்ற மனுவை தாக்கல் செய்வதற்கான தகுதி பற்றி மனுதாரர் தெரிவிக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் பற்றிய புகார்களை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு அல்லது காவல் நிலையத்தில் தான் கொடுக்க வேண்டும். ஆனால் நடைமுறைகளுக்கு முரணாக மனுதாரர் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த மனு செல்லத்தக்கது என்பதை உறுதி செய்ய வேண்டுமானால், எந்த வகையில் மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் யாரைப்பற்றி எல்லாம் கூறுகிறார்களோ, அவர்களை பிரதிவாதியாக சேர்க்கவில்லை. இதனால் அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்து மதத்தின் பெரியவராக கருதப்படுபவர் ஜெயேந்திரர். இந்து மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் அவர். அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சாட்சி விசாரணையில் பலர் முரண் சாட்சி (பல்டி) அடிப்பதால், அவர் மீது பொய் வழக்கு தொடர்ந்த சிலர், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை இப்போது தெரிவிக்கின்றனர்.
பத்திரிகைகளும் இதை பெரிதுபடுத்துகின்றன. எனவே இந்த பிரச்சனை தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் இறுதி முடிவு எடுக்கும்வரை இதுபற்றி செய்தி வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். என்னை இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 9-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.