தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் களை கட்டும் ஓணம் பண்டிகை: கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
தூத்துக்குடி: தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது.
ஓணம் பண்டிகையை கொண்டாட தூத்துக்குடியில் உள்ள கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். வரும் 9-ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கியமான பண்டிகை ஓணம். உலகில் எங்கெல்லாம் கேரள மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
கேரள மக்கள் வசந்தகால விழாவாக திருவோணத்தை கொண்டாடுகின்றனர். அத்தம் பிறந்ததும் ஓணத்தை கொண்டாட பொதுமக்கள் தயாராகுகின்றனர். அத்தம் நட்சத்திரத்தில் இருந்து பத்தாவது நாள் திருவோணம் நட்சத்திரம். "அத்தம் பத்தினு பொன்னோணம்' என்று கேரள மக்கள் கூறுவார்கள்.
ஓணம் பண்டிகையின் 10 நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பதார்த்தங்களுடன், உற்சாகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி என்று பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். கேரளாவில் ஓணம் குடும்ப உறவை பலப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அத்தம் நட்சத்திரம் கடந்த 31-ம் தேதி பிறந்தது. இதனால் அன்று முதல் வீடுகள், கோயில்கள், கிளப்புகளில் அத்தப்பூ கோலம் போடும் நிகழ்ச்சி துவங்கியது. திருவோணம் வரை தினசரி விதவிமாக பூக்களால் கோலம் போடுவார்கள். தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு ஷிப்பிங் கம்பெனிகளிலும் ஏரளாமான கேரள மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பல பேர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இதைப்போல் இந்தாண்டும் ஓணம் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
வசந்தகால விழாவான ஓணத்தை குமரி மாவட்ட மக்கள் கலாச்சார விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். ஓணத்திற்கு அத்தப்பூ, ஊஞ்சல், ஓணக்கோடி, விருந்து போன்ற அம்சங்கள் உள்ளது. மேலும் ஓணப்பந்து விளையாட்டு, புலிக்களி, கைகொட்டிக்களி, திருவாதிரைக்களி, தும்பி துள்ளல் போன்றவைகளும் இடம் பெறுகிறது.
அத்தப்பூ திட்டை அமைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடுக்காக பத்து நாட்களில் பத்து வகை பூக்களால் வீடுகளுக்கு முன் அத்தப்பூ இடும் காட்சிகள் இன்று அரிதாகிவிட்டது. இதுபோல் ஓண விளையாட்டுகளும் விளையாட நேரம் இல்லாமல் போய்விட்டது. குமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் கேரளாவின் நிலையும் இவ்வாறே உள்ளது. ஆனால் கலாச்சார நினைவுகளை கைவிடத் தயாராகாத இளைஞர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஓணவிழா கொண்டாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
விலை கொடுத்து பூக்களை வாங்கி தங்கள் பகுதியில் அத்தப்பூ கோலமிட்டு வருகின்றனர். அத்தம் முதல் பத்து நாட்களும் விதவிதமான டிஷைன்களில் பூக்களால் அத்தப்பூ கோலமிடுகின்றனர். ஓண விழா கொண்டாட்டங்களுக்கு குமரி மாவட்ட இளைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.