திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை 9-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தூத்துக்குடி: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்யத் தூண்டியது, இங்குள்ள நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 3 வழக்குகளில் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பிரபுதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதாடுகையில், அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 2 வழக்குகளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.