திஹார்.. நீண்டு கொண்டே போகும் விவிஐபி 'சிறை பறவைகள்'!
டெல்லி: வரலாறு காணாத வகையில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஐபி கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வரும் நாட்களில் இந்தப் பட்டியல் மேலும் நீளும் என்றே தெரிகிறது.
டெல்லியில் உள்ள திஹார் சிறைக்கு லேட்டஸ்டாக மேலும் ஒரு வி.ஐ.பி. அந்தஸ்து கிடைத்துள்ளது. காரணம் நாட்டின் முக்கியமான வி.ஐ.பி.க்கள் பலர் தங்களது சொந்த வீடுகளை விட்டு விட்டு தற்போது அங்கு தான் உள்ளனர். லேட்டஸ்டாக திஹார் சென்றுள்ளவர் ராஜ்யசபா எம்பி அமர் சிங். ஓட்டு போட எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒன்றும் தனியாகப் போகவில்லை. அவருக்கு துணையாக அதே வழக்கில் கைதான முன்னாள் பாஜக எம்.பி.க்கள் பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோரும் திஹார் சென்றுள்ளனர்.
முதன் முதலில் ராசா
கடந்த பிப்ரவரி மாதம் முதல் திஹார் சென்றுள்ள முக்கிய புள்ளிகள் பட்டியல் வருமாறு,
விஐபி என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா. நாட்டையே உலுக்கிய 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே வழக்கில் தொடர்புடைய முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆர். கே. சண்டோலியா ஆகியோரும் ராசாவை பின்தொடர்ந்து திஹார் சென்றனர்.
அட இமாலய ஊழலில் வெறும் 3 பேர் தான் கைது செய்யப்படனரா என்றால் இல்லை. இந்த மூவர் முதல் பேட்சில் கைதானவர்கள்.
அடுத்த பேட்ச்சில் கனிமொழி
அடுத்த பேட்சில் கனிமொழி எம்.பி. மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் ஷரத் குமார் ஆகியோர் கைதாகி திஹாரில் அடைக்கப்பட்டனர்.
திஹார் டெல்லியில் இருப்பதால் கைதிகளுக்கு வட இந்திய உணவு வழங்கி வந்தனர். தற்போது வி.ஐ.பி.க்கள் படையெடுப்பதால் மெனுவை மாற்றியுள்ளனர். தென்னிந்திய வி.ஐ.பி.க்களுக்காக இட்லி, சாம்பார், வடையெல்லாம் தருகின்றனர்.
2ஜி ஊழலில் சில வியாபாரப் புள்ளிகளும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், யார் என்று பார்ப்போம்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயன்கா, யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, சினியுக் பிலிம்ஸ்-ன் கரிம் மொரானி, குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆசிப் பால்வா, ராஜீவ் பி. அகர்வால், அனில் அம்பானி குரூப்பின் கௌதம் டோஷி, ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோரும் திஹாரில் சிறையில் உள்ளனர்.
'கஜினி' கல்மாடி
அடுத்த மெகா ஊழல் காமன்வெல்த் ஊழல். உலக அரங்கில் இந்தியாவின் பெயர் கெட்டதற்கு காமன்வெல்த் ஊழல் பெரும் பங்காற்றியுள்ளது. காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடிக்கு முதலில் பதவி பறிபோனது. அடுத்தபடியாக சிபிஐ அவரைக் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. அவரும் தனியாகப் போகவில்லை. சக ஊழியர்களான லலித் பனோட், வி.கே. வர்மா, ஏ.எஸ்.வி. பிரசாத், முன்னாள் அரசு அதிகாரி சுர்ஜீத் லால் ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
திஹார் சிறையில் உள்ள மற்ற கைதிகள் இத்தனை வி.ஐ.பி.க்களையும் அதுவும் தாங்கள் இருக்கும் இடத்தில் பார்ப்போம், பேசுவோம் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த பட்டியல் முடிந்துவிடவில்லை. மேலும் சிலர் திஹார் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திஹார் கைதிகளின் கண்காட்சியில் மேலும் பல அரசியல் மற்றும் வர்த்தக ஸ்டார்கள் சேருவார்கள் என்றும் தெரிகிறது.