களியக்காவிளை,ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய காங். எம்.எல்.ஏ.: டிரைவர்கள் ஸ்டிரைக்
களியக்காவிளை: கேரள மாநிலம், பாறாசாலை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நவுசாத் என்பவரை தாக்கியுள்ளனர்.
களியக்காவிளையை அடுத்துள்ள பாறாசாலை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வேனில் டிரைவராக பணிபுரிபவர் நவுசாத் மற்றும் டெக்னீஷியன் ரசீத். இவர்கள் 2 பேரும் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.
அப்போது நெடுவலம் விளையைச் சேர்ந்த வாசவன் என்பவர் விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்ட நவுசாத் ஆம்புலன்ஸ் வேன் பழுதாகி உள்ளது என்றும், வேறு ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாசவனின் உறவினர்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று அங்கு நவுசாத், ரசீத் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் பாறாசாலை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நவுசாத்துடன் தகராறு செய்து ஆம்புலன்சுக்கு உடனே ஏற்பாடு செய்யுமாறு கூறினர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நவுசாத்தையும், டெக்னீஷியன் ரசீத்தையும் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவுசாத் மற்றும் ரசீத் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தகவல் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து 108 அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். மேலும் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் தனியார் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.