நாங்கள் கண்தானம் செய்து விட்டோம், மக்களும் செய்ய வேண்டும்-பிரதமர், மனைவி கோரிக்கை
இன்று தேசிய கண்தான தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் இன்று தங்கள் கண்களை தானம் செய்ய உறுதியளித்து, அதுதொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
நம் நாட்டில் சுமார் 4. 5 மில்லியன் பேர் கண்பார்வையில்லாமல் தவித்து வருகின்றனர். இதில் கருவிழி மாற்று சிகிச்சை மூலம் 3 மில்லியன் பேருக்கு பார்வை கிடைக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக கண்தானம் செய்யுமாறு மக்களை ஊக்குவிக்கின்றனர்.
கண்தானம் செய்வதால் கருவிழிக்கோளாறால் பார்வையில்லாமல் இருப்பவர்கள் கண்ணிலும், வாழ்விலும் வெளிச்சம் வரும். 400-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கண்தான முகாம்கள் நடத்தி வருகின்றன.
அருகில் உள்ள கண்வங்கிகளை தொடர்பு கொள்ள வசதியாக பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். மீட்டர் இல்லா 1919 சேவையை அளித்து வருகிறது.