அகமதாபாத்தை தாக்குவோம்: 3-வது மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்
டெல்லி: டெல்லியைத் தொடர்ந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரடட்டல் வந்துள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று ஹூஜி தீவிரவாத அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இந்த மெயில் ஜம்மூவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடக்கிறது.
இதையடுத்து நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஒரு இமெயில் அனுப்பியது. இது மேற்கு வங்கத்திலிருந்து வந்தது.
இந்நிலையில் இன்று 3வது இமெயில் வந்துள்ளது. அதில் குஜாராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இமெயில் மேல் இமெயில் வந்தாலும் 13 பேர் உயிரை காவு வாங்கிய குண்டுவெடிப்பை யார் நடத்தியது என்று இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது மக்களை பீதியடைச் செய்துள்ளது.
இதற்கிடையே இரண்டாவது இமெயில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.