டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம்- திடீர் உரிமை கோரும் இந்தியன் முஜாஹிதீன்
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம் என்று ஹூஜி அமைப்பின் பெயரில் இ மெயில் வந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு தாங்களே காரணம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு கூறியுள்ளது. இதுவும் இமெயில் மூலம் வந்த தகவலாகும்.
இந்த இமெயில் [email protected] என்ற முகவரியிலிருந்து வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் உள்ளது. டெல்லி வணிக வளாகம் ஒன்றில் வியாழக்கிழமை இன்னொரு தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டுள்ளது. புதன்கிழமையன்று கோர்ட்டுக்கு நிறைய கூட்டம் வரும் என்பதால் அந்த நாளில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டது என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.
இந்த மெயில் யாரால் அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து வந்ததா அல்லது வேறு யாரேனும் திசை திருப்ப அனுப்பினரா என்பது தெரியவில்லை.
இதற்கு முன்பு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பலவற்றில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு சம்பவம் நடந்த உடனேயே மெயில் அனுப்பியுள்ளது. மேலும் அவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது உருதில்தான் இருக்கும். ஆனால் இந்த மெயில் இந்தியில் இருப்பதால் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள் போலீஸார்,.
ஏற்கனவே ஹூஜி பெயரில் வந்த இமெயில் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக வந்துள்ள மெயிலால் குழப்பம் அதிகரித்துள்ளது.