கொள்முதல் நிறுத்தம்: பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை திடீர் சரிவு
பாவூர்சத்திரம்: கேரள கொள்முதல் நிறுத்தப்பட்டதால் பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை குறைந்தது.
கேரளாவில் நாளை (9-ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வந்தன. இதனால் கடந்த 4 தினங்களாக காய்கறி விலை உயர்ந்து வண்ணம் இருந்தது. இன்று ஓணம் பண்டிகை என்பதால் கேரள வியாபாரிகள் தங்கள் வியாபார கொள்முதலை நிறுத்திவிட்டனர். இதனையடுத்து காய்கறி விலை திடீரென சரிந்தது.
2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ரூ.30க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ.15 -க குறைந்தது.
இதுபோல் வெண்டைக்காய் ரூ.15-ல் இருந்து 9 ஆகவும், பீட்ரூட் ரூ.8-ல் இருந்து ரூ.5, முருங்கை ரூ.25-ல் இருந்து ரூ.15, மாங்காய் ரூ.55-ல் இருந்து ரூ.20, பல்லாரி ரூ.12-ல் இருந்து ரூ. 9 என அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் 15 வரை குறைந்துள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் நேற்று முன்தினண் முதல் காய்கறி கொள்முதலை நிறுத்தியதால் உள்ளூர் விவசாயிகளிடம் காய்கறி கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இருப்பு உள்ள காய்கறிகளின் விலையும் குறைந்தது.