கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி உண்ணாவிரதம்: 15 பேர் மீது வழக்கு
கூடன்குளம்: கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இன்று பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பு இல்லை. கூடன்குளம் அணுமின் நிலையத்தால் தென் தமிழகம், கேரள மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும். இதனை கருத்தில் கொண்டு கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக இடிந்தகரையைச் சேர்ந்த 15பேர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை விட்டு விட்டு எங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரிய செயலாகும். போலீசார் அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.
கூடன்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 6 அணு உலைகளை சுற்றி சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு குடியிருப்புகள் இருக்கக் கூடாது என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூடன்குளத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என கூறியுள்ளார். இதனால் கூடன்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் உள்ள இடிந்தகரை, வைராவிகிணறு, எஸ்.எஸ்.புரம், விஜயாபதி உட்பட 15 கிராம மக்கள் அகற்றப்படுவார்களா? அல்லது அகற்றப்படமாட்டார்களா என்பது தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். அவர்கள் குழப்பத்தை கலெக்டர் தீர்த்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அதுபோல் கடலில் 500 மீட்டர் தூரத்திற்குள் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில அரசு அலுவலர்கள் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுக்கின்றனர். இதுபோன்ற முன்னுக்கு பின் முரணான அறிக்கைகள், தகவல்களால் கூடன்குளம் பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலைத்தில் ஏற்கனவே 100 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பிரிவும் துவங்கப்படவுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை என கூறி இடிந்தகரைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இதில் கலந்து கொண்டனர்.