ஒவ்வொரு நிமிடமும் 'திக் திக்'-9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா
11-9-2001 அன்று அமெரிக்கா தன் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது நடந்தது. உலக வர்த்தக மையக் கட்டிடங்கள், ஈ, எறும்பு கூட எங்கள் அனுமதியின்றி நுழைய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் பெருமைப்பட்ட பென்டகன் கட்டிடம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். உலகில் உள்ள அத்தனை தொலைக்காட்சிகளிலும் நாள் முழுவதும் இந்த தாக்குதல் பற்றிய ஒளிபரப்பு தான்.
இதைப் பார்த்து உலகமே அதி்ர்ச்சி அடைந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எறிய மக்கள் பீதியில் அலறிக் கொண்டு இங்கும், அங்கும் ஓட என ஒரே பதட்டமாக இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. 5, 000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கிய இந்த தாக்குதலை அமெரி்க்காவால் மறக்கவே முடியாது.
இந்த தாக்குதல் நடக்கும் வரை நாட்டின் பாதுகாப்பு பற்றி நம்பிக்கையாக இருந்த அமெரிக்கா தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை அவசர அவசரமாக மாற்றியது.
1979-ம் ஆண்டு முதலே செயல்பட்டு வந்தாலும் அல் கொய்தா 9/11 தாக்குதலால் ஒரே இரவில் உலகப் பிரபலம் ஆனது. அதுவரை யார் என்றே தெரியாமல் இருந்த ஒசாமா பின் லேடன் உலக போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியானார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அமெரிக்கர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.
முதலில் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க மறுத்தாலும் பின்பு ஒப்புக் கொண்டார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவவது தனக்கு சிறிதும் பிடிக்கவில்லை என்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒசாமா ஒரு ஒலிநாடாவை வெளியிட்டார்.
9/11 தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான காலித் ஷேக் முகமது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடந்த 2003-ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் தற்போது குவாண்டானாமோ பே சிறையில் உள்ளார்.
தீவிரவாதத்திற்கும் சரி, தீவிரவாதிகளுக்கும் சரி நாங்கள் ஒருநாளும் ஆதரவு அளித்ததும் இல்லை, அளிக்கப்போவதும் இல்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பமான உறைவிடமாகத் தான் அந்நாடு இருந்து வருகிறது. பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருக்கையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு பேசிய முஷாரப் அமெரிக்க தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும், சட்ட ஒழுங்கின்மையையும் எதிர்த்துப் போராடப்போவதாக தெரிவித்தார்.
9/ 11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவும், இங்கிலாந்தும் நேட்டோ மற்றும் நேட்டோ அமைப்பில் இல்லாத நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போரைத் துவங்கியது. அதிலும் குறிப்பாக அல் கொய்தாவை வேட்டையாடத் துவங்கியது.
கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த அல் கொய்தாவும், பாகிஸ்தான் தாலிபான்களும் சேர்ந்து திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சதியை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்தனர். இந்த வழக்கில் பைசல் ஷாஷாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, தாக்குதல் நடத்தி அவர்கள் அழித்து வருகிறது.
9/11 தாக்குதலால் ஒரே இரவில் பிரபலமான ஒசாமா பின் லேடனை அமெரி்க்கப் படைகள் வலைவீசித் தேடி வந்தன. ஒசாமா தோரா, போரா மலையில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. இறுதியில் பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத்தில் வைத்து ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி சுட்டுக் கொன்றன.
ஒசாமாவுடன் அல் கொய்தா ஒன்றும் அழிந்துவிடவில்லை. மாறாக ஒசாமாவின் மரணத்திற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் ஒசாமா இறந்தததால் அமெரிக்கர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். அதேசயம், உலகத் தீவிரவாதிகளின் ஒட்டுமொத்த ஒரே எதிரியாக அமெரிக்கா மாறிப் போயுள்ளதால் நித்திய கண்டனம் பூரணாயுசு கதையாகியுள்ளது அமெரிக்காவின் நிலை.