சிறுநீரகம், மார்பில் பலத்த அடி: அசாருத்தீன் மகன் தொடர்ந்து கவலைக்கிடம், உறவினர் உடல் அடக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19), தனது உறவினர் அஜ்மலுர் ரஹ்மானுடன் (16) 1000 சிசி சுசுகி சூப்பர் பைக்கில் ஹைதாராபாத் ரிங் ரோட்டில் படுவேகமாகச் சென்றார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை ஹைதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஜ்மலூர் ரஹ்மான் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அயாஸுத்தீன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருடைய மார்பு, சிறுநீரகங்களில் பலத்த அடிபட்டுள்ளதால் அவர் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்த அசாருத்தீன் தகவல் அறிந்து இன்று காலை ஹைதராபாத் வந்திறங்கினார். மருத்துவமனைக்கு வந்த அவர் தனது சகோதரி அதாவது அஜ்மலூர் ரஹ்மானின் தாய்க்கு ஆறுதல் கூறினார்.
மார்பில் ரத்த கசிவைத் தடுத்து நிறுத்த அயாஸுத்தீனுக்கு நேற்று ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அயாஸுத்தீன் அசாருத்தீனின் முதல் மனைவிக்கு பிறந்தவர். அவருக்கு அசாதுத்தீன் என்ற அண்ணன் உண்டு.
அஜ்மலூர் ரஹ்மானின் உடல் சாந்திநகரில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. இறந்த அஜ்மல் காங்கிரஸ் தலைவர் கலீக்குர் ரஹ்மானின் மகன், முன்னாள் எம்பி கலீலுர் ரஹ்மானின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.