குஜராத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவல்- ஐ.பி. எச்சரிக்கை
டெல்லி: குஜராத்துக்குள் மூன்று தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. எச்சரித்துள்ளது.
அம்பாசிடர் காரில் இவர்கள் வந்துள்ளதாகவும், இவர்களைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஐ.பியின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வந்த இ-மெயில்களில் அடுத்த குறி அகமதாபாத் தான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மூன்று தீவிரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவியுள்ளது தெரியவந்துள்ளது.
அகமதாபாத்தை தகர்ப்பதாக மெயில் அனுப்பியவர் கைது:
இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்பு பொறுப்பேற்பதாகவும், அகமதாபாத்தில் மேலும் குண்டு வெடிக்கும் என்று மூன்றாவதாக மிரட்டல் இ-மெயில் அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மோனு என்றும், அந்த இளைஞர் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தான் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்ததாகவும், சமீபத்தில் தான் வேலையை இழந்ததாகவும் கூறியுள்ளார்.