பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் அடக்கம்
பரமக்குடி: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் பலத்த பாதுகாப்புடன் அவரவர் சொந்த ஊர்களில் அடக்கம் செய்யப்பட்டன.
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் நடந்த குருபூஜையில் பங்கேற்க கிளம்பிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரமக்குடியில் பெரும் வன்முறை மூண்டது.
ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி தலித் மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தை போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் ஒடுக்கினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் மற்றும் வன்முறை காரணமாக பரமக்குடியே போர்க்களம் போலாகி விட்டது.
இந்த நிலையில் பலியானவர்களில் 6 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவற்றைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்தனர்.
உடல் அடக்கத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்னும் அசாதாரண நிலை நிலவி வருவதால் கூடுதலாக 2000 போலீஸார் குவிக்கப்பட்டு 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமக்குடியில் தொடர்நது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊரே மயான அமைதியாக காணப்படுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிற பகுதிகளில் அமைதி நிலவுகிறது
இதற்கிடையே, கமுதி, பார்த்திபனூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் அமைதி படிப்படியாக திரும்பி வருகிறது.