பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தாமலேயே கலவரத்தை அடக்கி இருக்கலாம்: சீமான்
சென்னை: பரமக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூடு தேவையற்ற ஒன்று. அது முறையற்ற முறையில் நடந்துள்ளது என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பரமக்குடியில் நடந்த கலவரத்தை அடக்க, காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி, 7 பேர் பலியாகி இருப்பது, அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
நாம் தமிழர் கட்சியினர் மூலம் நான் அறிந்த விவரத்தின்படி, அங்கு போலீசார் தூக்கி சூடு நடத்தாமலேயே கலவரத்தை தடுத்திருக்கலாம் என தெரிகிறது. சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் குறைவானவர்கள். இதை அடக்க அங்கு பணியில் இருந்த 3,000 போலீசாரால் முடியவில்லையா?
மறியலில் ஈடுபட்ட மக்களை கலைத்தோ அல்லது கைது செய்தோ நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட பிறகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதுவும் முட்டிக்கு கீழே போலீசார் சுடாமல், தாறுமாறாக சுட்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சிலும், தலையிலும்தான் குண்டு பாய்ந்துள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக உள்ள காவல் துறை இப்படி நடந்து கொண்டால், அவர்களை மக்கள் எப்படி நம்புவார்கள்?
செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாளாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இந்த சம்பவத்தின் நிழலுடன் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுசரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரியாக கையாளாமல் விட்டதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க, தமிழக முதல்வர் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது பாராட்டிற்குரியது, என்றார்.