சேத்தூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ: வனத்துறையினர் விசாரணை
சேத்தூர்: சேத்தூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது. சமூக விரோதிகள் யாரும் தீ வைத்தனரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி-விருதுநகர் மாவட்ட எல்லைப்பகுதியான சேத்தூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்து காட்டுத்தீ பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட எல்லைப்பகுதியான சிவகிரி வனப்பகுதிக்குட்பட்ட பகுதி, விருதுநகர் மாவட்ட எல்லைப்பகுதியான தேவியார்பீட் பகுதியில் காட்டுத்தீ பரவி தொடர்ந்து மலை உச்சி வரை சென்று எரிந்து வருகிறது. இந்த மலையில் காய்ந்த புற்கள், புதர்கள், மரங்கள் இருப்பதால் தீ வேகமாக பரவி எரிந்து வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆடு, மாடு மேய்க்கச் செல்பவர்கள் தீ வைத்தனரா அல்லது சமூக விரோதிகள் யாரும் தீ வைத்தனரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.