அசாருத்தீன் மகனின் இடது சிறுநீரகம் அகற்றம்: தொடர்ந்து கவலைக்கிடம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பி.யுமான அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது உறவினர் அஜ்மலுர் ரஹ்மான் மரணம் அடைந்தார்.
அயாஸுத்தீனுக்கு மார்பு, சிறுநீரகத்தில் பலத்த அடிபட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனைகளின் சிஇஓ டாக்டர் ஹரி கூறியதாவது,
அயாஸ் தொடர்ந்து சுயநினைவில்லாமல் தான் உள்ளார். அவரது சிறுநீரகப் பிரச்சனை தான் கவலை அளிப்பதாக உள்ளது. அவரை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவரது இடது சிறுநீரகத்தில் இருந்து ரத்தக் கசிவு நிற்கவேயில்லை. அதனால் நேற்று காலை அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டோம். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றார்.
அயாஸுத்தீன் மூளைக்குத் தேவையான அளவு ரத்தமும், ஆக்ஸிஜனும் செல்லமுடியவில்லை. இதுவும் டாக்டர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அவரது மூளை சிதைவடைந்திருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்து சில மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையில் சேர்த்தனர். அது கூட இத்தனை பிரச்சனைகளுக்கு காரணாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விபத்தில் மரணம் அடைந்த அஜ்மல் அசாருத்தீன் சகோதரியின் மகன். இதனால் அசார் மருத்துவமனைக்கும், சகோதரியின் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.