கள்ளக் காதல் விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலர் வெட்டிக் கொலை
ஓமலூர்: ஓமலூர் அருகே அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலர் கள்ளக்காதல் தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் மாவட்ட துணை செயலராக இருந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
செங்கல்சூளை தொழிலில் ஈடுபட்டுள்ள கலையரசன், பென்னாகரம் இடைத்தேர்தல் பணிக்கு சென்றபோது, பாலக்கோடை சேர்ந்த ஜெயமணி மனைவி பூர்ணிமா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளத்தொடர்பாக மாறி, அடிக்கடி உல்லாசமாக இருந்தனர்.
இதுகுறித்து, பூர்ணிமாவுடன் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த, அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜூக்கு தெரியவந்தது. இதையடுத்து, பூர்ணிமா, கோவி்ந்தராஜ் உடன் இருந்த உறவை நிறுத்தி கொண்டார். ஆனால், கோவிந்தராஜ் தொடர்ந்து பூர்ணிமாவிற்கு தொந்தரவு கொடுத்ததால், ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதிக்கு பூர்ணிமாவை குடும்பத்துடன் குடிவைத்தார்.
இதை அறிந்த கோவிந்தராஜ் பூர்ணிமா தங்கிருந்த வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். தகராறு முற்றி ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மறைத்து வைத்திருந்த அறுவாளால் பூர்ணிமாவை சரமாரியாக வெட்டினார். வலி தாங்க முடியாமல் கலையரசனின் செங்கல் சுளை வெட்டு காயத்துடன் பூர்ணிமா ஓடியுள்ளார். அவரை துரத்திய கோவிந்தராஜ், செங்கல்சூளையில் இருந்த கலையரசனையும் சரமாரியாக வெட்டினார்.
இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். செங்கல்சூளை பணியாளர்கள் சிலர் கோவிந்தராஜை தாக்கியதில், அவரும் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் வெட்டுகாயமடைந்த பூர்ண்மா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.