தொடரும் விலையேற்றம்: பொதுப் பணவீக்கம் 9.78 ஆக உயர்ந்தது!
இப்போது வாரா வாரம் நாட்டின் உணவுப் பணவீக்கத்தை மட்டும் வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பொதுப் பணவீக்கம் குறித்து மாதம் ஒரு முறை மட்டுமே தகவல் வெளியிடப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பொதுப் பணவீக்கம் 9.78 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 9.62 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயம் விலை 45.29 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் உற்பத்தித் துறைக்குத் தேவையான முதன்மைப் பொருள்கள் 12.53 சதவீதம் உயர்ந்துள்ளது.
கனிமப் பொருள்கள் 17.75 சதவீத உயர்வு கண்டுள்ளன. இரும்பு மட்டுமே 20 சதவீத விலை உயர்வு கண்டுள்ளது இந்த ஒரு ஆண்டில்.
விலை நிலைகளின் போக்கை கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த மாதம் மொத்த பணவீக்கம் இரட்டை இலக்கத்தைக் கடந்துவிடும் என்று தெரிகிறது.
உணவுப் பணவீக்கம் ஏற்கெனவே 9.55 சதவீதத்தில் உள்ளது. இந்த வாரத்துக்கான உணவுப் பணவீக்க அளவு நாளை தெரிந்துவிடும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே பல்வேறு வட்டி வீதங்களை 11 முறை உயர்த்தியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. ஆனால் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விலைகளில் கொண்டுவர முடியவில்லை.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கை - பிரணாப்
இந்த நிலையில் தொடர்ந்து பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "பணவீக்க உயர்வு கவலை அளிப்பதாகவே உள்ளது. ஆனாலும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றார்.