டி.டி.எச். சேவை, ஐ.பி.எல்.-க்கு கேளிக்கை வரி: சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை: டி.டி.எச். மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
இது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதா:
தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தின்படி வீடுகளுக்கு நேரடி சேவையாக வழங்கப்படும் (டி.டி.எச்.) கேளிக்கைகளையும் இந்திய பிரதான கழகத்தால் (ஐ.பி.எல்.) நடத்தி வரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு இதுவரை வரி எதுவும் இல்லை. சில மாநிலங்களில் இதற்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசும் டி.டி.எச். சேவைக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி டி.டி.எச். நிறுவனங்களுக்கு 30 சதவீதமும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு 25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
திரையரங்குகளில் திரைப்பட காட்சியை ஒளிபரப்ப அனுமதிப்பதற்கான வரியையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. வணிகர்களிடம் இருந்து விற்பனை வரி நிலுவை தொகையை வசூலிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிலுவைகளை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டத்தை அறிமுகம் செய்ய சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் விற்பதற்கான பெட்ரோலிய பொருட்கள் இங்கு விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வரி ஏய்ப்பை தடுக்க சட்டதிருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி 6-வது இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யப்படும் எந்த சரக்குகளுக்கும் கடவு சீட்டு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.