அன்னாவைக் கைது செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டது யுபிஏ: அமெரிக்க நாடாளுமன்றக் குழு
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறபப்ட்டுள்ளதாவது:
ஏராளமான ஊழல் புகார்களால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயர் பெருமளவில் கெட்டுப் போய் விட்டது. இதனால் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேசமயம், அன்னா ஹஸாரேவை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் அரசுக்கு மேலும் கெட்ட பெயரே கிடைத்துள்ளது.
ஹஸாரே போராட்டத்திற்கு இதன் மூலம் மிகப் பெரியஅளவில் ஆதரவு கிடைத்து விட்டது.
இந்தியாவில் பல்வேறு மட்டங்களில் நிலவும் ஊழல்களை எதிர்த்து மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும் தோன்ற இவை காரணமாகி விட்டன. ஊழலுக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்பும் இயக்கத்தை வலுவடையச் செய்ததில் அன்னா ஹஸாரேவுக்கு்ம், பாபா ராம்தேவுக்கும் முக்கியப் பங்குண்டு.
ஜூன் மாதத் தொடக்கத்தில் ராம்தேவ் டெல்லியில் நடத்திய மிகப் பெரிய போராட்டம், மக்கள் மத்தியில் கருப்புப் பணம், ஊழல் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தது. ராம்தேவ் கைது செய்யப்பட்ட விதம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் 72 வயதான ஹஸாரே போராட்டத்தில் குதித்தபோது மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்தது. அதிலும் ஹஸாரே கைது செய்யப்பட்டபோது மக்கள் பெரும் அதிருப்தியும் கொதிப்பும் அடைந்தனர்.
ஹஸாரே குழுவினரின் லோக்பால் மசோதாவே சிறந்தது என்று இந்தியர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் கருதுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.