அசாருத்தீன் மகன் குணமடைய பிரார்த்திக்கும் யுவராஜ் சிங், சானியா மிர்சா
ஹைதராபாத்: பைக் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் குணமடைய யுவராஜ் சிங், சானியா மிர்சா ஆகியோர் தங்களை பிரார்த்தனையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பி.யுமான அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அயாஸுத்தீன் குணமடைய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் தங்கள் பிரார்த்தனையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
"அசாருத்தீன் மகனுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. என்னால் பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடியும்," என்று யுவராஜ் ட்வீட் செய்துள்ளார்.
"இன்ஷா அல்லாஹ் அயாஸுத்தீன் குணமடைய துவா செய்கிறேன். அசாருத்தீன் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். மரணம் அடைந்த அசார் சகோதரியின் மகனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கட்டும். இந்த செய்தியைக் கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை," என்று சானியா ட்வீட் செய்துள்ளார்.
"நம் அனைவரின் பிரார்த்தனையும் அசாருத்தீனின் மகனைக் காப்பாற்றட்டும்", என்று நடிகர் பொம்மன் இரானி டுவீட் செய்துள்ளார்.