கண்மூடித்தனமாக பைக் ஓட்டாதே: அசாருத்தீன் மகனை எச்சரித்த உடற்கல்வி இயக்குனர்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பைக் விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பி.யுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் படுகாயம் அடைந்தார், அவரது சகோதரியின் மகன் அஜ்மலுர் ரஹ்மான் மரணம் அடைந்தார்.
அயாஸுத்தீன் ஹைதராபாத்தில் உள்ள் அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பல இடங்களில் எழும்புகள் முறிந்துள்ளன. அவரது மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது இடது சிறுநீரக்ததி்ல் இருந்து ரத்தக் கசிவு நிற்காகததால் அதை நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
அவரது சிறுநீரகப் பிரச்சனை மருத்துவர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பிறகு தான் அயாஸுத்தீனை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்தவுடன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் இன்னும் சுயநினைவில்லாமல் தான் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு அவரைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வேகமாக வண்டி ஓட்டுவதின் விபரீதங்கள் குறித்து கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் அயாஸுத்தீனை எச்சரித்துள்ளனர் என்று அக்கல்லூரியின் முதல்வர் ராமா ராவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
அயாஸுத்தீன் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் என்று தான் எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் டேனிகல் மற்றும் விஜய் பாஸ்கர் ரெட்டிக்கு அயாஸுத்தீன் வார இறுதி நாட்களில் வெளியே பைக்கில் சுத்துவது தெரிந்துள்ளது. கண்மூடித்தனமாக ஓட்டுவது குறித்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எங்கள் கல்லூரி அரங்கில் அயாஸுத்தீன் விரைவில் குணமடைய பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினோம் என்றார்.